ஹன்னிபால்

ஹன்னிபால்
ஹன்னிபாலைச் சித்தரிக்கும் ஒரு பளிங்கு மார்பளவுச் சிலை, இத்தாலியின் பண்டைய நகர அரசான கபுவாவில் கண்டெடுக்கப்பட்டது
சுதேசியப் பெயர்
𐤇𐤍𐤁𐤏𐤋
பிறப்புகி. மு. 247
கார்த்திஜ், பண்டைய கார்த்தேஜ் (தற்கால தூனிசியா)
இறப்புகி. மு. 183 – கி. மு. 181 (அகவை 64–66)
லிபிச்சா, பித்தினியா (தற்கால கெப்சே, துருக்கி)
சார்பு
தரம்கார்த்தேஜினிய இராணுவத்தின் தலைவர்
போர்கள்
  • இசுப்பானியா மீதான பார்சித் படையெடுப்பு
சகுந்தும் முற்றுகை
இரண்டாம் பியூனிக் போர்
உரோன் கடப்பு யுத்தம்
திசினுசு யுத்தம்
திரேபியா யுத்தம்
திரசிமீன் ஏரி யுத்தம்
ஏசர் பலேர்னுசு யுத்தம்
செரோனியம் யுத்தம்
கன்னே யுத்தம்
நோலா யுத்தம் (கி. மு. 216)
நோலா யுத்தம் (கி. மு. 215)
நோலா யுத்தம் (கி. மு. 214)
தரேந்தும் யுத்தம் (கி. மு. 212)
கபுவா யுத்தம்
எர்தோனியா யுத்தம் (கி. மு. 212)
நுமிசிதிரோ யுத்தம்
கனுசியம் யுத்தம்
தரேந்தும் யுத்தம் (கி. மு. 209)
குருமேந்தும் யுத்தம்
குரோதோனா யுத்தம்
சமா யுத்தம்
  • உரோமானிய–செலூக்கியப் போர்
ஐரிமெதோன் யுத்தம் (கி. மு. 190)
  • பெர்கமீன்-பித்னியப் போர்
துணை(கள்)இமில்சே
பிள்ளைகள்ஒரு வேளை ஒரு மகன் இருந்திருக்கலாம்
உறவினர்கமில்கர் பார்கா (தந்தை)
கசுதுருபால் (சகோதரர்)
மாகோ (சகோதரர்)
வெளிரிய கசுதுருபால் (மைத்துனர்)
வேறு செயற்பாடுகள்அரசியல்வாதி

ஹன்னிபால் என்பவர் ஒரு கார்த்தேஜினியத் தளபதி மற்றும் அரசியல் மேதை ஆவார். இவர் இரண்டாம் பியூனிக் போரின் போது உரோமைக் குடியரசுக்கு எதிரான யுத்தத்தில் கார்த்தேஜின் படைகளுக்குத் தலைமை தாங்கினார். வரலாற்றின் மிகச் சிறந்த இராணுவத் தலைவர்களில் ஒருவராகப் பெரும்பாலானவர்களால் கருதப்படுகிறார்.

ஹன்னிபாலின் தந்தையான கமில்கர் பார்கா முதல் பியூனிக் போரின் போது ஒரு முன்னணிக் கார்த்தேஜினியத் தளபதியாக இருந்தார். இவரது தம்பிகள் மகோ மற்றும் கசுதுருபால் ஆகியோர் ஆவர். இவரது மைத்துனர் வெளிரிய கசுதுருபால் என்று அழைக்கப்படுகிறார். அவரும் கார்த்தேஜினிய இராணுவங்களுக்குத் தளபதியாக இருந்துள்ளார். நடு நிலக் கடல் வடிநிலப் பகுதியில் ஒரு மிகுந்த பதற்றமான காலத்தின்போது ஹன்னிபால் வாழ்ந்தார். முதலாம் பியூனிக் போரில் கார்த்தேஜைத் தோற்கடித்த பிறகு உரோமைக் குடியரசானது பெரிய சக்தியாக உருவாகியதனால் இந்தப் பதற்றம் ஏற்பட்டது. இழந்த பகுதிகளை மீட்க வேண்டும் என்ற எண்ணம் கார்த்தேஜில் இருந்தது. இது ஹன்னிபால் தனது தந்தையிடம் "என்றுமே உரோமின் நண்பனாக இருக்க மாட்டேன்" என்று செய்து கொடுத்த சத்தியத்தால் அடையாளப்படுத்தப்படுகிறது.[1]

பொ. ஊ. மு. 218இல் ஹன்னிபால் இசுப்பானியாவில் இருந்த உரோமின் ஒரு கூட்டாளி நாடான சகுந்துமைத் (நவீன கால சகுந்தோ, எசுப்பானியா) தாக்கினார். இரண்டாம் பியூனிக் போர் ஏற்பட இது காரணம் ஆனது. வட ஆப்பிரிக்கப் போர் யானைகளுடன் ஆல்ப்சு மலைகளைக் கடந்து இத்தாலி மீது ஹன்னிபால் படையெடுத்தார். ஒரு கார்த்தேஜினிய மற்றும் பகுதியளவு கெல்ட்டிய இராணுவத்தின் தலைவராக இத்தாலியில் இவர் இருந்த முதல் சில ஆண்டுகளில் திசினசு, திரேபியா, திராசிமின் ஏரி, மற்றும் கன்னே யுத்தங்களில் இவர் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றார். உரோமானியர்களுக்குக் கடுமையான சேதத்தை விளைவித்தார். தன்னுடைய மற்றும் தன் எதிரிகளின் முறையே பலம் மற்றும் பலவீனத்தைக் கண்டறியும் திறனுக்காக இவர் மதிக்கப்படுகிறார். அதை வைத்து யுத்த திட்டங்களை இவர் திட்டமிடுவார். முன்னர் உரோமுடன் கூட்டணி வைத்திருந்த பல்வேறு இத்தாலிய நகரங்களை வெல்லவும், அந்நகரங்களுடன் கூட்டணி வைப்பதற்கும் இவரது நன்றாகத் திட்டமிடப்பட்ட உத்திகள் இவருக்கு அனுமதியளித்தன. ஹன்னிபால் பெரும்பாலான தெற்கு இத்தாலியை 15 ஆண்டுகளுக்கு ஆக்கிரமித்திருந்தார். பாபியசு மேக்சிமசால் தலைமை தாங்கப்பட்ட உரோமானியர்கள் இவருடன் நேரடியாக சண்டையிடுவதைத் தவிர்த்தனர். மாறாக உராய்வுப் போரை (பாபியன் உத்தி) நடத்தினர். இசுப்பானியாவில் கார்த்தேஜினியத் தோல்விகள் ஹன்னிபாலுக்கு வலுவூட்டல் படைகள் வருவதைத் தடுத்தன. இவரால் ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற இயலவில்லை. வட ஆப்பிரிக்கா மீதான உரோமானியத் தளபதி சிபியோ ஆப்பிரிக்கானசால் தலைமை தாங்கப்பட்ட ஒரு பதில் படையெடுப்பால் இவர் கார்த்தேஜுக்குத் திரும்பி வரும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஹன்னிபால் இறுதியாக சமா யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டார். ஓர் உரோமானிய வெற்றியில் இப்போரானது முடிந்தது.

போருக்குப் பிறகு ஹன்னிபால் வெற்றிகரமாக சுபெத் (சமூகத்தின் மூத்த தலைவர்) பதவிக்குப் போட்டியிட்டார். உரோமால் தீர்ப்பளிக்கப்பட்ட போர் இழப்பீட்டை செலுத்த அரசியல் மற்றும் நிதிச் சீர்திருத்ததங்களை இவர் கொண்டு வந்தார். இந்த சீர்திருத்தங்கள் கார்த்தேஜினிய உயர்குடி உறுப்பினர்கள் மற்றும் உரோமில் பிரபலமற்றதாக இருந்தது. பிறகு இவர் தப்பித்து நாடு கடந்து வாழ ஆரம்பித்தார். இந்நேரத்தில் இவர் செலூக்கிய அரசவையில் வாழ்ந்தார். உரோமுக்கு எதிரான மூன்றாம் அந்தியோகசின் போரில் இவர் இராணுவ ஆலோசகராகச் செயல்பட்டார். மெக்னீசியா போரில் அந்தியோகசு தோல்வியடைந்தார். உரோமின் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு அந்தியோகசு தள்ளப்பட்டார். ஹன்னிபால் மீண்டும் தப்பித்து ஓடினார். ஆர்மீனிய இராச்சியத்தில் நின்றார். இவரது ஓட்டம் பித்தினியா அரசவையில் நின்றது. இவர் உரோமானியர்களிடம் காட்டிக் கொடுக்கப்பட்டார். நஞ்சுண்டதன் மூலம் தற்கொலை செய்து கொண்டார்.

பேரரசர் அலெக்சாந்தர், சைரசு, யூலியசு சீசர், சிபியோ ஆப்பிரிக்கானசு, மற்றும் பிர்ரசு ஆகியோருடன் பண்டைக் கால மேற்குலகத்தில் மிகச் சிறந்த இராணுவ உத்தியாளர்கள் மற்றும் தளபதிகளில் ஒருவராக ஹன்னிபால் கருதப்படுகிறார். புளூட்டாக்கின் கூற்றுப் படி, "வரலாற்றின் மிகச் சிறந்த தளபதி யார்?" என்று சிபியோ ஹன்னிபாலைக் கேட்டார். "அலெக்சாந்தர் அல்லது பிர்ரசு, பிறகு நான்" என்று ஹன்னிபால் இதற்குப் பதிலளித்தார்.[1]

மேலும் காண்க[தொகு]

உசாத்துணை[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Plutarch, Life of Titus Flamininus 21.3–4. Plutarch adds that "when asked what his choices would be if he had beaten Scipio, he replied that he would be the best of them all". However, Plutarch gives another version in his Life of Pyrrhus, 8.2: "Pyrrhus, Scipio, then myself".
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹன்னிபால்&oldid=4017088" இலிருந்து மீள்விக்கப்பட்டது