பிரகலாதன்

இரணியனை நரசிம்மர் வதம் செய்வதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பிரகலாதன்

பிரகலாதன் இந்து சமயத்தின் புராணங்களின் படி தெய்வத்தன்மை வாய்ந்த மிகச் சிறந்த விஷ்ணு பக்தன். இவன் இரணியன் (இரணியகசிபு) என்னும் கொடிய அரக்கனின் புதல்வன். விஷ்ணு உண்மையான கடவுள் அல்லர், அவர் தங்கள் குல விரோதி என்று இரணியன் நயமாகவும் மிரட்டியும் சித்திரவதைப் படுத்திப் பார்த்தும் அவனால் பிரகலாதன் மனதை மாற்ற முடியவில்லை. எத்துணை துன்பப்பட்டாலும் விஷ்ணுதான் மூல முதற்கடவுள் என்ற தனது எண்ணத்திலிருந்து பிரகலாதன் பிறழாது உறுதியாக நின்றான். பாகவத புராணம் பிரகலாதனின் விஷ்ணு பக்தியைப் பற்றி எடுத்தியம்புகிறது. புராணங்களில் பெரும்பாலும் பாலகனாகவே குறிப்பிடப்படுவதால் ஓவியங்களிலும் காட்சிகளிலும் பிரகலாதன் சிறுவனாகவே சித்தரிக்கப்படுகிறான்.

பிரகலாதன் பிறப்பும் இரணியன் வதமும்[தொகு]

இரணியனை வதம் செய்யும் நரசிம்மரும் அவரை வணங்கி நிற்கும் பிரகலாதனும் அவனது தாய் கயாதுவும்

பிரகலாதன் கொடிய அரக்கனான இரண்யகசிபுக்கும் (இரணியன்) கயாதுக்கும் மகனாகப் பிறந்தான். இரணியகசிபு, தான் பெற்ற சாகா வரத்தால் ஈரேழு உலகத்திலும் ஆட்சி புரிந்து வந்தான். தான்தான் கடவுள் என்றும் அனைவரும் தன்னைத்தான் வணங்க வேண்டும் என்றும் அனைவரையும் கட்டாயப்படுத்தி வந்தான். அவனது மனைவி கர்ப்பம் தரித்தாள். நாரத மாமுனி ஆனவர், பிரகலாதன் தன் தாயின் கர்ப்பத்தில் இருக்கும் போது அரி ஸ்ரீமன் நாராயணன் (விஷ்ணு) தான் இந்த ஈரேழு உலகத்திற்கும் கடவுள் என்று போதித்து விட்டார். அசுரர்களின் குருவான சுக்கிராச்சாரியார் இரணியன் தான் கடவுள் என்று போதித்தார், ஆனால் பிரகலாதன் அரி ஸ்ரீமன் நாராயணன் தான் தன் கடவுள் என்று கூறினான்.

இந்தச் செய்தியறிந்த இரணியன் பிரகலாதனை மாற்ற சாம, பேத, தான தண்டம் என பலவிதங்களில் முயற்சி செய்தான். அவனது முயற்சிகள் எல்லாம் தோல்வியில் முடிந்தன. ஆத்திரமடைந்த இரணியன் தன் மகன் என்றும் பாராமல் கொல்ல முயற்சி செய்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியே அடைந்தான். யானையின் காலால் இடரச் செய்தல், கொடிய விஷம் கொண்ட பாம்புகளோடு அடைத்து வைத்தல், விஷமருந்தச் செய்தல், தீக்குள் இறங்கச் செய்தல் போன்ற அவனது கொடுமுயற்சிகளில் இருந்து பிரகலாதன், தான் கொண்ட அசைக்க முடியாத விஷ்ணு பக்தியினால் விஷ்ணுவின் உதவியால் காப்பாற்றப்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன. இரணியனின் சகோதரி ஹோலிகா அவளை நெருப்பு தீண்டாத வரம் பெற்றிருந்தாள். அவள் மடியில் பிரகலாதனை உட்கார வைத்து தீக்குள் இறக்கிய போது பிரகலாதன் விஷ்ணு பெயரைச் சொல்லி வேண்ட நெருப்பு பிரகலாதனை ஒன்று செய்யவில்லை, மாறாக ஹோலிகா நெருப்பில் மாண்டாள். இந்நிகழ்வு இந்தியாவில் ஹோலிப் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது.[1]

பிரகலாதனைக் கொல்லத் தான் எடுத்த முயற்சிகளில் எல்லாம் தோற்றுப்போன இரணியன் தானே நேராகப் பிரகலாதனைக் கொல்லப் போன போதும் பிரகலாதன் பயமின்றி தான் வணங்கும் கடவுள் தன்னைக் காப்பார் என்றான். அது கேட்டு ஆத்திரத்தில் அறிவிழந்தவனாக இரணியன் விஷ்ணுவைத் தானே கொல்லப் போவதாகக் கூறி உன் கடவுளைக் காட்டு என பிரகலாதனிடம் கேட்க, பிரகலாதனோ தன் கடவுள் அரி ஸ்ரீமன் நாராயணர் எங்கும் இருப்பார் எதிலும் இருப்பார், ஏன் தூணிலும் இருப்பார் எந்தத் துரும்பிலும் இருப்பார் என்று கூறினான்.

இரணியன் ஒரு தூணைக் காட்டி, இந்த தூணில் உள்ளாரா என்று கேட்க, பிரகலாதனோ இதை உடைத்து சோதித்துப் பாருங்கள் தந்தையே என்று கூறினான். இரணியன் அந்தத் தூணை உடைக்க, ஸ்ரீமன் நராயணர், நரசிம்ம அவதாரம் (மனிதன் பாதி சிங்கம் பாதி) பூண்டு தூணில் இருந்து வெளிவந்து இரணியன் பெற்ற சாகா வரங்கள் பலிக்காத வகையில் அவனை வதம் செய்து பிரகலாதனைக் காத்தருளினார்.[2]

பிரகலாதன் கதை இன்னும் தமிழ்நாடு, கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் அருகில் உள்ள வக்கனாங்கொம்பு குட் கிராமத்தில் வருடந்தோறும் தைப் பொங்கலுக்குச் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

இரணிய வதத்திற்கு பிந்திய வாழ்க்கை[தொகு]

அரசவையில் அமர்திருக்கும் பிரகலாதன், பிரகலாதனுடன் அவர் மகன் விரோசனனும், சூதன்வானும்

நரசிம்ம அவதாரத்திற்கு பிறகு, பிரகலாதன் மகாவிஷ்ணுவின் மகனாக வளர்ந்து, நாளடைவில் முவுலகிற்கும் அரசனாக ஆண்டு வந்தான்.

பிரகலாதனும் இந்திரனும்[தொகு]

பிரகலாதனின் ஒழுக்கமான இயல்பினால் தேவலோகத்தில் ஆளுமை அவரிடம் தஞ்சமடைததும் தனது பதவியை இறந்ததாக நினைத்த இந்திரன் பிருகஸ்பதி மற்றும் சுக்கிரச்சாரியாரின் உதவியுடன் ஒரு அந்தணனின் உருவத்தில் சென்று, பிரகலாதனிடம் அவனது ஒழுக்கத்தை தானமாக பெற்றுக்கொண்டான்.

இதனால், பிரகலாதனிடமிருந்து அவரின் ஐந்து ஆற்றல்கள் ஐந்து உருவங்களாக வெளியேறி, அவரிடம் ஒழுக்கம் இல்லாத இடத்தில் தங்களால் வசிக்க முடியாது என்று கூறி விடைப்பெற்றனர்.[1]

பிரகலாதனும் நரநாராயணர்களும்[தொகு]

ஒருமுறை, பிரகலாதன் நரநாராயணர்களை சந்தித்த போது, அம்முனிவர்கள் மௌனமாக இருப்பதை கண்டு, அவர்களுடன் போரிட்டதாக புராணங்கள் கூறுகின்றன.

விரோசனன், சூதன்வான், கேசினி- பிரகலாதனின் தீர்ப்பு[தொகு]

ஒருசமயம், பிரகலாதனின் மகன் விரோசனன் கேசினி என்பவளை சந்தித்த போது அவள் விரோசனனிடம் கேள்வி கேட்டாள். அடுத்த நாளில், அவளது பேரில் விரோசனனுக்கும் சூதன்வான் என்ற அந்தணனுக்கும் சர்ச்சை வந்த போது, பிரகலாதன் அதனை தீர்த்து வைத்தார்.[2]

வாமன அவதாரத்தின் போது பிரகலாதன்[தொகு]

விஷ்ணு வாமன அவதாரமெடுத்து மஹாபலியின் யாகத்திற்கு வந்தபோது, பிரகலாதனும் அங்கு இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.

பிரகலாதனின் கடைசி காலம்[தொகு]

தனது இறுதி காலத்தில் பிரகலாதன் விஷ்ணுவை துதித்து, இறுதியில் அவருக்கு மோட்சம் வழங்கப்பட்டதாக யோக வசிஷ்ட நூல் கூறுகிறது.

இருப்பினும், ராகவேந்திரர் இந்த பிரகலாதனின் அவதாரமாகவாகவே கருதப்படுகிறார்.

பிரகலாதனின் வாழ்க்கை எடுத்துரைக்கும் நற்கருத்துக்கள்[தொகு]

  • உலகில் அனைத்தையும் சமமாக மதிப்பிட வேண்டும்.
  • ஒழுக்கத்தினால் எதையும் அடையலாம்; அதே ஒழுக்கத்தை இழந்தால், அனைத்தையும் இழக்கவும் வாய்ப்புண்டு.
  • நீதிமானாக இருக்க வேண்டும்.
  • கடவுள் எங்கும் இருப்பார்; தன் பக்தர்களை எப்பொழுதும் காப்பார்.
  • பக்தி மார்க்கத்திற்கு வயது ஒரு தடையல்ல.
  • கடவுளிடம் கொண்ட மாறாத நம்பிக்கை பக்திக்கு வழிகாட்டும்.
  • கொடியவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

நூல் தரும் குறிப்புகள்[தொகு]

பகவத் கீதை (10.30) இல் கிருஷ்ணர் கீழ்க்காணும் வாசகங்களைக் கூறுகிறார்:

மொழிபெயர்ப்பு: "தைத்திரிய அசுரர்களில் நான் பிரகலாதனாய் இருக்கிறேன், அடக்குபவர்களில் நான் காலமாய் இருக்கிறேன், விலங்குகளில் சிம்மமாய் இருக்கிறேன் மற்றும் பறவைகளில் கருடனாய் இருக்கிறேன்."[3]

சீக்கிய மதத்தில் பிரகலாதன்[தொகு]

சத்யுகக் கடவுளின் பக்தர்களில் ஒருவனாக சீக்கிய மதத்தில் பிரகலாதன் கருதப்படுகிறான். மேலும் பிரகலாதனைப் பரமாத்மாவின் சீடனாகவும் சீக்கிய மதம் கூறுகிறது

சீக்கிய நூல் தரும் குறிப்புகள்[தொகு]

சீக்கியர்களின் மத நூலான குரு கிரந்த சாகிப் இல் பிரகலாதன் 27 முறை குறிப்பிடப்பட்டுள்ளான். இந்து சமயத்தில் உள்ளது போலவே குரு கிரந்த சாகிப்பிலும் பிரகலாதனின் தந்தை ஹர்னகாஷ் அவனைக் கொல்ல முயன்றதையும் கடவுள் மனித-சிம்ம வடிவில் (நரசிம்மர்) வந்து பிரகலாதனைக் காத்ததையும் கூறுகிறது.

பிரகலாதன் சிறையில் அடைக்கப்பட்டு சிறைக்கதவுகள் பூட்டப்பட்டன பயமற்ற அக்குழந்தை சிறிதும் அச்சப்படவில்லை. "எனக்குள்ளே உலகத்தின் கடவுளான குரு இருக்கிறார். என அவன் கூறினான். கடவுளின் படைப்பு கடவுளோடு மோதப் பார்க்கிறது. ஆனால் இது வீணான முயற்சி அவனுக்கு முன்னமே தீர்மானிக்கப்பட்டது நடந்தே தீரும்; அவன் கடவுளின் பணிவான பக்தனிடமே தனது விவாதத்தைத் தொடங்கி விட்டான். ||7|| உனது கடவுள் எங்கே, பிரபஞ்சத்தின் கடவுள் எங்கே இப்போது? எனப் பிரகலாதனை வெட்ட ஆயுதத்தை ஓங்கிக் கொண்டே அவன் தந்தை கேட்டான். பிரகலாதன் கூறிய பதில்: "உலகின் வாழ்வுமாய், அனைத்தும் தருபவருமாய் உள்ள கடவுளே முடிவில் எனக்கு உதவியும் ஆதரவுமாவார் நான் பார்க்குமிடங்களில் எல்லாம் அவர் பரந்தும் கலந்துமுள்ளார்."||8|| தூணைப் பிளந்து கொண்டு கடவுள் தோன்றினார். தற்பெருமை கொண்ட அசுரன் வதம் செய்து அழிக்கப்பட்டான். பக்தர்களின் மனங்கள் குளிர்ந்தன,வாழ்த்துக்கள் குவிந்தன. தனது பக்தனுக்கு மாபெரும் பேற்றினைக் கடவுள் அளித்தார் ||9|| (Guru Granth Sahib , page no: 1154) [4]

புனித தலங்கள்[தொகு]

கீழே தரப்பட்டுள்ள இந்தியாவில் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள தலங்கள் பிரகலாதன் அல்லது நரசிம்மதேவரோடு தொடர்புடைய புனித தலங்களாகும்.

  • சிம்ஹாச்சலம்
  • அகோபிலம்
  • கதிரி
  • திருக்கடிகை(சோளிங்கபுரம்(அ) சோளிங்கர்

மேலும் படிக்க[தொகு]

  • Cole, W. Owen (1995). The Story of Prahlad. Heinemann Educational. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-431-07756-8. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Varadaraja V. Raman - Variety in Religion And Science: Daily Reflections, iUniverse, 2005, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-595-35840-3, p.259
  2. 2.0 2.1 Dimmitt, Cornelia (1978). Classical Hindu Mythology: A Reader in the Sanskrit Purāṇas. translated by J. A. Van Buitenen. Temple University Press. p. 312. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-87722-122-7. {{cite book}}: Unknown parameter |coauthors= ignored (help)
  3. "B-Gita 10.30". Archived from the original on 2005-09-08. பார்க்கப்பட்ட நாள் 2012-06-29.
  4. http://www.srigranth.org/servlet/gurbani.gurbani?Action=Page&Param=1154&punjabi=t&id=49563#l49563

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரகலாதன்&oldid=3958034" இலிருந்து மீள்விக்கப்பட்டது